search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரணில் விக்ரமசிங்கே"

    • இந்தியா இப்போது வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ளது.
    • பல வருடங்களாக இலங்கை, விடுமுறையை கழிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

    கொழும்பு:

    நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

    இதனை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு கடனுதவிகளை வழங்கியதுடன், இலங்கையில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்யும் எனவும் உறுதியளித்தது.

    அந்த வகையில் இந்தியாவின் பிரபல ஐடிசி குழுமம் இலங்கை தலைநகர் கொழும்புவில் பல ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமான சொகுசு ஓட்டலை அமைத்துள்ளது. இந்த ஓட்டலை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:-

    இந்தியா இப்போது வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ளது.

    இதன் மூலம் இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது. குறிப்பாக சுற்றுலாத் துறையை முன்னிலைப்படுத்தி இந்தியாவுடன் அதிக பொருளாதார ஒத்துழைப்பை விரைவுபடுத்த விரும்புகிறோம். அதிக ஒத்துழைப்பால் இரு நாடுகளும் ஆதாயம் அடையும்.

    இந்த ஓட்டல் இலங்கைக்கு குறிப்பாக இந்தியாவில் இருந்து சுற்றுலாவை அதிகரிக்க உதவும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

    நமது பொருளாதாரத்தை எப்படி ஒருங்கிணைத்து நாம் நெருங்கி வருகிறோம் என்பது குறித்து கடந்த ஆண்டு நானும், பிரதமர் மோடியும் கையெழுத்திட்ட தொலைநோக்கு அறிக்கையின் ஒரு பகுதியாக இவை உள்ளன.

    பல வருடங்களாக இலங்கை, விடுமுறையை கழிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எதிர்காலத்தில் பெங்களூரு, சென்னை அல்லது ஐதராபாத்தில் உள்ள ஒருவர் இந்தியாவின் வடபகுதிக்கு செல்வதை விட விமானத்தில் ஏறி இங்கு (இலங்கை) வருவது எளிதாக இருக்கும்.

    இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே பேசினார். 

    • இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே துபாயில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
    • அப்போது, எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியை வழி நடத்துவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

    துபாய்:

    வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வழியில் நேற்று துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்தார். அப்போது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அவரை சந்தித்தார்.

    அப்போது, ரணில் விக்ரமசிங்கே மம்தாவிடம், உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா? இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்குவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு சிரித்தவாறே பதிலளித்த மம்தா பானர்ஜி, அது மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் எங்களை ஆதரித்தால், நாங்கள் நாளை ஆட்சியில் இருப்போம் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே துபாய் விமான நிலைய ஓய்வறையில் என்னை சந்தித்தார். கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்தார். பணிவுடன் அதனை ஏற்றுக்கொண்டேன். அப்போது, கொல்கத்தாவில் நடைபெற உள்ள சர்வதேச தொழில் உச்சி மாநாட்டில் பங்கேற்க அவரை அழைத்தேன். இலங்கை வருமாறு எனக்கு அவரும் அழைப்பு விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    • ரணில் விக்ரமசிங்கே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
    • தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    கொழும்பு:

    இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சட்ட திருத்தம் முழுமையாக அமல்படுத்தப் படவில்லை.

    இதற்கிடையே கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம், இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    இதற்கிடையே இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதில் தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை ஜே.வி.பி. உள்ளிட்ட சிங்கள கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் கட்சிகள், தமிழ் கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

    இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கூறும்போது கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மக்களின் நலனுக்காக கூட்டத்தில் கலந்து கொள்வோம்.

    இது ஒரு உண்மையான முயற்சியாக இல்லாமல் அரசியல் வித்தை என்று நிரூபிக்கப்பட்டால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்யும் உரிமை எங்களுக்கு உள்ளது என்றார்.

    முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் பல எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

    • கடந்த வாரம் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
    • இலங்கை தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் மூலம் இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    அந்த சட்டதிருத்தம் தமிழர் பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கவும், தமிழர்களுக்கு அதிகார பரவல் அளிக்கவும் வகை செய்கிறது. ஆனால் அந்த சட்டதிருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதை அமல்படுத்தக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த வாரம் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஒருங்கிணைந்த இலங்கையின் வளர்ச்சிக்காகவும், இலங்கை தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும், அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    இதுகுறித்து ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, தங்கள் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

    இந்நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டம் அதிபரின் செயலகத்தில் நடக்கிறது.

    இதுகுறித்து அதிபரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், அதிபர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் அதிபர் செயலகத்தில் நாளை நடைபெறும். இதில் தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். இதில் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட அனைத்து கட்சிகளும், சுயேட்சைகளும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கான தேசிய நல்லிணக்க திட்டம் பற்றி எடுத்துரைக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும்.
    • இந்தியாவின் வளர்ச்சி இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கும் நன்மை பயக்கும் என்று ரணில் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

    அதன்பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:-

    அண்டை நாடுகள் உடனான கொள்கையில் இலங்கை முதலிடத்தை வகிக்கிறது. நாகையில் இருந்து இலங்கைக்கு படகு சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே வர்த்தகம் போன்றவற்றிற்கு புதிய கதவுகள் திறந்து உள்ளன.

    மீனவர் பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும். தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புகிறோம்.

    இந்தியா மற்றும் இலங்கை இடையே விமான போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா- இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகான தொலைநோக்கு திட்ட ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரணில் விக்ரமசிங்கே பேசும்போது, நாகை- காங்கேசன் இடையிலான படகு சேவை, சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவும் என்றும், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளதாகவும் கூறினார். இந்தியாவின் வளர்ச்சியானது, அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கும் நன்மை பயக்கும் என்றும் ரணில் நம்பிக்கை தெரிவித்தார்.

    • இலங்கையில் உள்ள தமிழர்கள் இலங்கையின் சமமான குடிமக்களாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டியது அவசியம்.
    • இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்ட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிஉள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை அதிபர், 2022-ம் ஆண்டு பதவியேற்றதற்குப் பிறகு முதன்முறையாக 2 நாள் பயணமாக புதுடெல்லி வரவுள்ளார். தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் பூகோளரீதியான நெருக்கம் உள்ளது. வரலாறு, பொருளாதார மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் காரணமாக நீண்டகாலமாக பல பிரச்சனைகள் நிலுவையில் உள்ளது.

    இலங்கை அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் கவலையளிக்கும் இரண்டு முக்கிய பிரச்சனைகளான கச்சத்தீவை மீட்பது மற்றும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும், இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

    மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், ஒன்றிய அரசு ஒப்பந்தம் மூலம், கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்திருப்பது, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு அடுத்த நாளான 29.6.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார்.

    மேலும் 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தைக் கண்டித்தும், அந்த ஒப்பந்தத்தை ஒன்றிய அரசும் மறுபரிசீலனை செய்து திருத்தி அமைக்க முயற்சி எடுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    "தமிழ்நாட்டு மீனவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்" கச்சத்தீவை மீட்டுத் தருமாறு 22.9.2006 அன்று அப்போதைய பிரதமருக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் மீண்டும் கடிதம் எழுதினார்.

    ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர், "கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், நமது கடலோர சமூகங்களுக்கு கணிசமான பொருளாதார இழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது" என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தெரிவித்தார். 1974 ஜூன் 26, 28 தேதிகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தமும், 1976 மார்ச் 23-ம் தேதியிட்ட ஒப்பந்தமும், கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்ப்பது தொடர்பான தகவல் பரிமாற்றங்களும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை, செல்லாதவை என்று அறிவிக்கக் கோரி 2013-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கலைஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளுக்குத் தமிழ்நாட்டு மீனவர்கள் எளிதில் செல்ல முடியாத சூழல் உள்ளது. அத்துமீறி நுழைவதாக இலங்கைக் கடற்படையினர் குற்றஞ்சாட்டி கைது செய்து, துன்புறுத்தும் சூழல் உள்ளது. பாக் வளைகுடாவின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான கோரிக்கைகளில் ஒன்றாகும்.

    கச்சத்தீவை மீட்டெடுக்கும் வகையில், ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்கிட வேண்டும், பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலை நாட்டிடவும், மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கிடும் வகையிலும், கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    அதுவரை அப்பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையையாவது மீட்டெடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    நமது மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது, மாநிலத்தின் கடலோர கிராமங்களில் உள்ள மீனவ மக்களிடையே ஆழ்ந்த கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், ஒன்றிய அரசு தூதரக நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.

    2020-ம் ஆண்டு முதல் இன்று வரை, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய 48 தாக்குதல் சம்பவங்களில், 619 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 83 மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதன்காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களும் வருவாய் இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன, ஒன்றிய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் 604 மீனவர்களையும், 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்தன.

    2023-ம் ஆண்டில் மட்டும் 74 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதாகவும், அவர்களில் 59 பேர் விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு திரும்பியுள்ள நிலையில், 2020-ம் ஆண்டு முதல், 67 மீன்பிடிப் படகுகள் இலங்கைவசம் உள்ளதாகவும் சமீபத்தில் ஜூலை 9, 2023 அன்று 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.

    மேலும், இதே கால கட்டத்தில், 38 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினராலும், இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களாலும் தாக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் ஐஸ் பெட்டிகள், மீன்பிடி வலை, ஜி.பி.எஸ். கருவிகள், மீன்பிடி உபகரணங்கள், பேட்டரி மற்றும் எஞ்சின் போன்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.

    எனவே, இந்த விவகாரத்தை வருகை தரும் இலங்கை அதிபரிடம் எடுத்துச் சென்று, சிறை பிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

    2018-ம் ஆண்டுக்கு முன்னர், இரு தரப்பிலும் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த மீன்பிடிப் படகுகள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிக்கப்பட்டன.

    இலங்கை அரசு, வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்கும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு, தனது மீன்வள சட்டத்தில் திருத்தம் செய்த காரணத்தினால், இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள்வசம் நல்ல நிலையில் உள்ள நமது மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகளை மீட்டு, தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    பல மீனவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பைப் பயன்படுத்தி, தங்கள் வணிகத்திற்கு முக்கியமானதும், தங்கள் குடும்பங்களின் முதன்மை வருமான ஆதாரமாகவும் விளங்கும் மீன்பிடிப் படகுகளை வாங்குவதற்கும், பராமரிப்பதற்கும் முதலீடு செய்துள்ளனர். முறையான இழப்பீடு அல்லது மாற்று ஏற்பாடுகள் இல்லாமல், இந்தப் படகுகள் இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்படுவதால், மீனவர்களுக்குக் கடுமையான வாழ்வாதார இழப்பு ஏற்படுவதுடன், நிதி நெருக்கடிக்கும் தள்ளப்படுகின்றனர்.

    இலங்கை அரசு உரிய சட்டத் திருத்தங்களைச் செய்து, சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்குவதைத் திரும்பப் பெற வேண்டும்.

    மீனவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், இரு நாட்டு அதிகாரிகளையும் உள்ளடக்கிய மறு சீரமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழு 2016-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

    இதுவரை, ஐந்து சுற்று கூட்டு செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன, கடைசியாக மார்ச் 2022 இல் இதுதொடர்பான கூட்டம் நடைபெற்றது, இருப்பினும், இந்தப் பிரச்சனைக்கு இதுநாள்வரை ஒரு சுமூகமான தீர்வு ஏற்படவில்லை.

    உரிய காலத்தில் கூட்டங்கள் நடத்தி ஆலோசனைகள் மேற்கொள்வதன் மூலம், மீனவர்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும், பயனுள்ள தகவல் தொடர்புகளை எளிதாக்கவும், சுமூகமான மீன்பிடி நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் இயலும்.

    1956-ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலை நிறுத்துவதிலும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசும், எங்களது கட்சியும் உறுதியாக உள்ளது.

    மேலும், இலங்கையில் உள்ள தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் இலங்கையின் சமமான குடி மக்களாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டியது அவசியமாகும். இந்த நோக்கத்திற்காக, இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்டுவதற்கு இலங்கை அதிபரை, பிரதமர் வலியுறுத்திட வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட விவகாரங்களில் பிரதமர் தலையீடும், ஆதரவும், நமது மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வரும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவிடும்.

    இதன்மூலம் நமது மீனவர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், இலங்கையுடனான நமது வரலாற்று சிறப்புமிக்க இருதரப்பு உறவுகளை மேம்படுத்திடவும் இயலும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.

    • நிலப்பறிப்பு மற்றும் போலீஸ் அதிகாரத்தை பறிப்பதும் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது.
    • இந்தியாவுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இலங்கை அரசு கடந்த காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கும், சர்வதேச சமுதாயத்திற்கும் இலங்கை தமிழர்களின் தலைவர் ஆர்.என்.சம்மந்தன் கடிதம் எழுதியிருக்கிறார்.

    நிலப்பறிப்பு மற்றும் போலீஸ் அதிகாரத்தை பறிப்பதும் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது.

    இதன்மூலம் மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்க வழிவகை செய்யும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு தொடர்ந்து முடக்கி வருவதையும் தமது கடிதத்தில் பிரதமர் மோடிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

    எனவே, ஜூலை 21-ந் தேதி இந்திய பிரதமரை சந்திக்க வருகிற இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவிடம் தங்களது உரிமைகளை வலியுறுத்தி பாதுகாப்பு தர வேண்டுமென்று இலங்கை தமிழ் அமைப்புகளின் செய்தித் தொடர்பாளர் சம்மந்தன் வலியுறுத்தியிருக்கிறார்.

    எனவே, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் இலங்கை தமிழர்களுக்காக போராடி பெறப்பட்ட 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே இந்தியாவுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு மட்டும் இந்தியா இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் டாலர்களை வழங்கி உள்ளது.
    • பிரதமர் மோடியுடன் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றார். தொடர்ந்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை மீட்க இலங்கை இந்திய அரசிடம் உதவிகேட்டது. இதனால் இலங்கை அரசுக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது.

    எரிபொருள், உணவுப்பொருள் என பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியது. தற்போது இலங்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக நாளை (வியாழக்கிழமை) இந்தியா வர உள்ளார்.

    இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளனர். அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா, இலங்கை ஆகிய 2 நாடுகளும் தூதரக உறவுகளை தொடங்கியதன் 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இந்த சுற்றுப்பயணம் அமைகிறது. தொடர்ந்து அவர் 21-ந் தேதி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பு 2 நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்தும், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்து மேம்படுத்தவும் உதவும் வகையில் அமையும் என கருதப்படுகிறது.

    கடந்த ஆண்டு மட்டும் இந்தியா இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் டாலர்களை வழங்கி உள்ளது. இந்தியாவின் ஆதரவு காரணமாகவே, இலங்கை சர்வதேச நிதி ஆணையத்திடமிருந்து 2.9 பில்லியன் நிதியைப் பெற முடிந்தது, அதற்காக ஏற்கனவே இலங்கை அரசு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது.

    இந்நிலையில் சமீபத்தில் கொழும்பில் நடந்த இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் இந்திய நாணயம் குறித்து அவர் பேசியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. இது இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளையும் சேர்த்து வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்கிறது.

    மேலும், அமெரிக்க டாலரை போல இந்தியாவின் ரூபாயயை பொது நாணயமாக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

    இது இந்தியாவின் அந்நிய செலாவணியை மேம்படுத்த உதவும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இந்த சூழலில் பிரதமர் மோடியுடன் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார்.
    • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் இந்தியா வளர்ச்சியை காண்கிறது

    கொழும்பு :

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார்.

    அப்போது இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய அவர் "ஜப்பான், கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கிழக்கு ஆசியா 75 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இ்ப்போது இந்தியாவுக்கான நேரம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் இந்தியா வளர்ச்சியை காண்கிறது" என்றார்.

    முன்னதாக உரையாற்றிய இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தின் தலைவர் டி.எஸ். பிரகாஷ் இலங்கைப் பொருளாதாரத்தில் இந்திய ரூபாயை மேம்படுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய ரணில், "இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகரான பொதுவான நாணயமாக மாறினால் அதை பயன்படுத்துவதில் இலங்கைக்கு எந்த தயக்கமும் இல்லை. அதை எப்படி செய்வது என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களை வெளியுலகில் இருந்து எடுத்துக் கொள்ள நாம் மனதை விசாலமாக வைத்திருக்க வேண்டும்" என கூறினார்.

    மேலும் அவர், "உலகம் வளர்ச்சியடைந்து வருகிறது, குறிப்பாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது" என தெரிவித்தார்.

    • இலங்கை அதிபர் அரசுமுறை பயணமாக இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளார்.
    • அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு முதல் முறையாக பயணம் செய்கிறார்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றார். தொடர்ந்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை மீட்க இலங்கை இந்திய அரசிடம் உதவிகேட்டது. இதனால் இலங்கை அரசுக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது. எரிபொருள், உணவுப்பொருள் என பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியது.

    தற்போது இலங்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

    இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளார். ஜூலை 21-ம் தேதி இந்தியா வரும் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

    இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கை சென்று இலங்கை அதிபரின் பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.

    அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ ஒப்பந்தம் எதுவும் கிடையாது.
    • இலங்கையில் சீனர்கள் 1,500 ஆண்டுகளாக இருக்கிறார்கள்.

    கொழும்பு :

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் பிரான்ஸ் அரசு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் நடுநிலை நாடு. அதே சமயத்தில், இந்தியாவுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற உண்மையை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இலங்கையில் சீனர்கள் 1,500 ஆண்டுகளாக இருக்கிறார்கள். ஆனால், சீன ராணுவ தளம் எதுவும் அங்கு இல்லை.

    சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ ஒப்பந்தம் எதுவும் கிடையாது. இனிமேலும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ராணுவ ஒப்பந்தத்தை சீனா விரும்புவதாக நாங்கள் கருதவில்லை.

    இலங்கையில் உள்ள அம்பந்தொட்டை துறைமுகம், சீன வர்த்தகர்களுக்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் பாதுகாப்பு, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

    அம்பந்தொட்டை துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தவில்லை. இலங்கை தென்பிராந்திய கடற்படை தலைமையகத்தை அம்பந்தொட்டைக்கு மாற்ற போகிறோம். அங்கு ஒரு படைப்பிரிவை நிறுத்தி வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு, சீனாவின் 'யுவான் வங்-5' என்ற அதிநவீன உளவு கப்பலை அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிறுத்திவைக்க இலங்கை அரசு அனுமதி அளித்தது.

    அந்த கப்பல், இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்களை உளவு பார்க்கும் என்ற அச்சத்தால், இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
    • தற்போதைய நிலவரம் குறித்து அவர் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

    கொழும்பு :

    இலங்கையில் பல ஆண்டுகளாக நீண்டு வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சிங்களர்களின் எதிர்ப்பையும் மீறி, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட தமிழர் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் உள்பட ஏற்கனவே பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்திய அவர், இது தொடர்பான செயல் திட்டங்களை வகுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

    இந்த பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அவர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழர்களுடன் நல்லிணக்கத்துக்கான செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான தேசிய கொள்கையை விரைவாக உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். குறிப்பாக, சட்டம் வகுத்தல், நிறுவன செயல்பாடுகள், நிலப்பிரச்சினைகள், கைதிகள் விடுதலை, அதிகார பரவலாக்கம் ஆகிய 5 முக்கிய துறைகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தினார்.

    மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமல்படுத்துதல், தேசிய நிலச்சபை நிறுவுதல், தேசிய நிலக்கொள்கை உருவாக்குதல் போன்ற அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டன.

    இதைத்தவிர காணாமல்போனோர் அலுவலகத்தின் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள், டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும் காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்டவற்றின் அவசியத்தையும் ரணில் விக்ரமசிங்கே கூட்டத்தில் வலியுறுத்தினார். நிவாரண அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் போன்றவற்றை நிறுவுவதற்கான தற்போதைய முயற்சிகளை அடுத்த 2 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறும் அதிபர் விக்ரமசிங்கே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    இறுதியாக இந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையும் சமர்ப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி, தேசிய பாதுகாப்பு மூத்த ஆலோசகர் சகலா ரத்நாயகே உள்பட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×